Wednesday, October 8, 2014

நிலவில் ஒருவன்




     'சந்திரனில் மனிதன்' என்று யாராவது உங்களிடம் சொன்னால், உடன் உங்கள் ஞாபகத்தில் வருவது, 'அப்போலோ 11' (Apollo 11) விண்கலத்தின் மூலம் சந்திரனில் காலடியெடுத்து வைத்த முதல் மனிதர்களான, நீல் ஆம்ஸ்ட்ராங்கும், எட்வின் அல்ட்ரினும்தான். அல்லது 'அப்போலோ 12' முதல் 'அப்போலோ 17' வரையான விண்கலங்களில் சந்திரனுக்குச் சென்று வந்த வானியல் ஆராட்சியாளர்களும் (Astronauts) உங்கள் ஞாபகத்திற்கு வரலாம். ஆனால், கடந்த சில தினங்களாகச் 'சந்திரனில் மனிதன்' என்று சொல்லும் போது, அதன் அர்த்தமே வேறாகிப் போயிருக்கிறது. சமீபமாக இணையத்தில் சூறாவளியாகச் சுழன்றடித்துச் சுற்றித்திரியும் ஒரு புகைப்படம், நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு சென்றிருக்கிறது. அந்த ஆச்சரியத்துக்குக் காரணம், சந்திரனின் மேற்பரப்பில் அச்சு அசலாக மனிதனைப் போலவே காணப்படும் ஒரு உருவம் நிற்பது போன்று அந்தப் புகைப்படம் இருந்ததுதான். அது யாரோ ஒருவரால் வெளியிடப்பட்டு, இணையம் மூலமாக இன்று உலகம் பூராவும் பரவியிருக்கிறது. அந்த உருவம் சந்திரனில் நிற்பதுபோல் தோற்றமளிப்பது மட்டுமில்லாமல், அதன் நிழலும் மனிதனின் நிழலைப் போலவே சந்திரத் தரையில் விழுந்திருப்பதாக அந்தப் புகைப்படத்தில் காணப்படுகிறது. அதனால், அந்தப் புகைப்படத்திலிருக்கும் உருவம், மனிதன் போன்ற ஒரு உயிரினம்தான் என்பதை நம் மனம் நம்ப விரும்புகிறது. ஆனால், அப்போலோ விண்கலங்களில் சென்று சந்திரனில் இறங்கியவர்களில் ஒருவரின் உருவமாக அந்த உருவம் இருக்க முடியாது. காரணம், அப்போலோ விண்கலங்களில் சென்ற விண்வெளி வீரர்கள், விண்வெளி ஆடைகளையும், தலைக் கவசங்களையும் அணிந்தே சந்திரனில் இருந்திருக்கிறார்கள். அவற்றை அணியாமல் அவர்களால் இருந்திருக்கவும் முடியாது. இந்த உருவமோ, எந்தத் தலைக் கவசத்தையும், விண்வெளி உடையையும் அணியாமல், சாதாரண ஒரு மனிதனைப் போன்று காணப்படுகிறது. அப்போலோ விண்வெளி வீரர்களையும், அந்த உருவத்தையும் ஒப்பிட்டுச் சொல்வதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. அப்போலோ விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள்தான், சந்திரனில் காட்சி தரும் அந்த உருவத்தைப் படம் பிடித்திருக்கிறார்கள். அதனால், 'அந்தப் படத்தில் இருப்பவரும் அப்போலோ விண்வெளி வீரர்களில் ஒருவராக ஏன் இருக்கக் கூடாது?' என்ற கேள்வியும் எழலாம் அல்லவா? 1972ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி புறப்பட்ட 'அப்போலோ 17' விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள், சந்திரனில் எடுத்த புகைப்படங்களுள் ஒன்றில்தான், இந்த மனித உருவமுள்ள உயிரினத்தின் படமும் இருந்திருக்கிறது. ஆனால் இப்படி ஒரு படம் இருப்பது பற்றி இதுவரை நாஸாவோ (NASA) அல்லது 'அப்போலோ 17' இன் விண்வெளி வீரர்களோ வாயே திறக்கவில்லை. ஆனால் ஆச்சரியகரமாக, 'அப்போலோ 17' விண்கலம்தான், சந்திரனுக்கு அனுப்பப்பட்ட கடைசி விண்கலமானது. அதற்குப் பின்னர் அமெரிக்கா எந்த ஒரு விண்கலத்தையும் சந்திரனுக்கு அனுப்பவேயில்லை. திடீரென தனது அனைத்துச் சந்திர சோதனைகளையும் நாசா முடித்துக் கொண்டதாக அறிவித்தது. இது ஒரு தற்செயலா? அல்லது……?



     மனிதர்களுடன் சந்திரனுக்குச் செல்லும் 'அப்போலோப் பயணத் திட்டம்' (Apollo Mission) என்பது வெறும் மூன்றே மூன்று வருடங்களுக்குள் நடந்து முடிந்துவிட்ட ஒரு திட்டமாகும். 1969ம் ஆண்டிலிருந்து 1972ம் ஆண்டு வரையுள்ள மூன்று வருட இடைக்காலத்தில், 'அப்போலோ 11' முதல் 'அப்போலோ 17' வரையிலான ஏழு விண்கலங்களை 'நாசா' நிறுவனம் சந்திரனுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இந்த ஏழு விண்கலங்களில் 'அப்போலோ 13' விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது (13ம் இலக்கம் துரதிர்ஸ்டமானது என்ற நம்பிக்கை இதனால் மேலும் வலுவடைந்தது). விண்கலத்தில் சென்ற மூன்று விண்வெளி வீரர்களும் விபத்தில் கொல்லப்பட்டார்கள். ஏனைய ஆறு விண்கலங்களும் சந்திரனில் இறங்கி, அவற்றில் சென்றவர்கள் சந்திரனின் நடந்த வெற்றி வீரர்களானார்கள் (மனிதர்கள் யாருமே சந்திரனில் காலடியெடுத்து வைக்கவில்லை என்னும் கோட்பாடு ஒன்று இருப்பது தனிக்கதை). 'அப்போலோ 17' விண்கலத்திற்குப் பின்னர், அமெரிக்கா எந்தவொரு விண்கலத்தையும் ஆராய்சிக்காகச் சந்திரனுக்கு அனுப்பி வைக்கவில்லை. இது அந்த நேரங்களிலேயே பலரால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. "கோடி கோடியாக டாலர்களைக் கொட்டி, அடுத்தடுத்துப் பல விண்கலங்களையும், மனிதர்களையும் சந்திரனுக்கு அனுப்பி வைத்த அமெரிக்கா, திடீரெனத் தனது பயணங்களை முடித்துக் கொண்டதாக அறிவித்துவிட்டு, முடங்கிப் போனது ஏன்? அப்படி அனைத்தையும் கைவிடும் அளவுக்கு  சந்திரனில் என்னதான் நடந்தது?" என்ற கேள்விகள் அப்போதே பரவலாகப் பலரால் கேட்கப்பட்டன. இன்றைய நாணய மதிப்பின்படி பார்த்தாலும், 100 பில்லியன் யூரோக்களுக்கு அதிகமான பணத்தை, அப்போலோத் திட்டங்களுக்காக அமெரிக்கா செலவளித்திருக்கிறது. இது மிகப்பெரிய அளவுப் பணம். அவ்வளவு பணத்தை இத்திட்டதுக்குச் செலவளித்துவிட்டுத் திடீரென நிறுத்திக் கொள்ளும் அளவுக்கு அப்போலோப் பயணங்களில், குறிப்பாக 'அப்போலோ 17' இன் பயணத்தில் என்ன விபரீதம் நடந்தது? இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் நாசாவிடமிருந்து கிடைத்த பதில், "நாம் சந்திரனை முழுமையாக ஆராய்ந்து விட்டோம். சந்திரனில் ஆராய்வதற்கு இதற்குமேல் ஒன்றுமேயில்லை. அதனால்  அதிகப் பணச் செலவுடன் இன்னுமொரு சந்திரப் பயணம் அவசியமற்றது" என்பதே! ஆனால், நாசாவின் இந்த அறிவித்தலை, நம்ப முடியாமல் சந்தேகக் கண்கொண்டுதான் பலரும் பார்த்தார்கள்.





    'சந்திரனின் அனைத்துப் பகுதிகளையும் நாசா உண்மையிலேயே ஆராய்ந்து முடித்துவிட்டதா?' என்று பார்த்தால், இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். பூமியிலிருந்து சந்திரனைப் பார்க்கும் போது தெரியும் அதன் மேற்பரப்புப் பகுதிக்கு, எதிர்புறமாக அமைந்திருக்கும், 'The Far side of the Moon' என்று சொல்லப்படும் சந்திரனின் மறுபக்கத்தை நாசா முழுமையாக ஆராயவேயில்லை. சந்திரனில் தரையிறங்குவதற்கு முன்னர், அதைச் சுற்றி வலம் வரும்போது, அந்தப் பகுதியைப் படமெடுத்ததோடு சரி. அந்த இடத்தில் மனிதன் நேரடியாக இறங்கி இதுவரை ஆராயவில்லை. சந்திரனின் மறுபகுதியில் மனிதன் இறங்கினால், பூமியுடனான தொலைத் தொடர்புகள் அனைத்தும் தொலைந்து போகும் என்னும் காரணத்தினால், அந்த இடங்களில் இறங்குவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று காரணங்கள் மட்டும் சொல்லப்பட்டன. கடைசிப் பயணங்களில் சந்திரனில் வாகனங்களைக் கொண்டு சென்று, அதன் மூலம் பயணங்களை மேற்கொண்ட சம்பவங்கள் நடந்தன. அப்படியொரு வாகனம் மூலமாகவாவது எதிர்ப்புறத்துக்கான ஒரு பயணத்தை மேற்கொண்டிருக்கலாமே என்ற கேள்விகளும் எழாமலில்லை. அப்போதிருந்த சூழ்நிலையில் அது சாத்தியம் இல்லாவிட்டாலும், பின்னராவது அதைச் சாத்தியமாக்கியிருக்கலாமல்லவா? இப்படிப் பல கேள்விகள் கேட்கப்படும் நிலையில், ஒரேயடியாகச் சந்திரப் பயணங்கள் முடிக்கப்பட்டதாக நாசா அறிவித்தது சந்தேகத்தையே கொடுத்தது.





    "சந்திரனுக்கு விண்கலங்களை நாசா அனுப்ப மறுத்ததற்குக் உண்மையான காரணமே வேறு. நாசா உண்மையை மறைக்கப் பார்க்கிறது. சந்திரனுக்குச் சென்ற விண்வெளி வீரர்கள் ஏலியன்களைக் (Alien) கண்டிருக்கிறார்கள். ஏலியன்கள் சந்திரனில் இருப்பது தெளிவாகத் தெரிந்ததனால், அங்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா பயப்படுகிறது" என்னும் வதந்திகள் அப்போதே உலாவர ஆரம்பித்திருந்தன. அப்போதெல்லாம் அவை சந்தேகத்துக்குரிய வதந்திகளாக மட்டும் இருந்தன. ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் புகைப்படம் அவை வதந்திகள் இல்லையென்று நம்மைச் சிந்திக்க வைத்திருக்கிறது. ஏற்கனவே ஏலியன்களைச் சந்திரனில் கண்டதாகச் சிலர் சொல்லியிருந்தும், அவை பெரிதுபடுத்தப்படாத நிலையில், இந்தப் புகைபடம் சிறிய சலனத்தை இப்போது ஏற்படுத்தியிருக்கிறது. ஏலியன்களைச் சந்திரனில் கண்டதாகச் சொன்னவர்கள் சாதாரண மனிதர்கள் இல்லை. அவர்களும் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியம் வாய்ந்தவர்கள்தான். அவர்களின் கூற்றையும் பொய்யானவை என்று எளிதில் தட்டிவிட்டுச் செல்ல முடியாது. எந்த மனிதர்களைச் சந்திரனுக்குச் செல்வதற்குத் தகுதியானவர்கள் என்று அமெரிக்கா தெரிவுசெய்து அங்கு அனுப்பியதோ, அந்த விண்கல வீரர்களில் சிலர்தான் தாங்கள் ஏலியன்களைச் சந்திரனில் கண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்.


    'நீல் ஆம்ஸ்ட்ராங்', 'எட்வின் அல்ட்ரின்', 'மைக்கேல் காலின்ஸ்' ஆகிய மூவரும் 'அப்போலோ 11' விண்கலப் பயணிகளாவார்கள். இதில் காலின்ஸ், விண்கலத்தைச் செலுத்துபவராகக் கடமையாற்றினார். ஆம்ஸ்ட்ராங்கும், அல்ட்ரினும் சந்திரனின் தரையில் இறங்கியவர்கள். இந்த இருவரும் சந்திரனைப் பலவிதமாக ஆராய்ந்து படங்களை எடுத்திருந்தார்கள். இவர்கள் எடுத்த படங்கள் அனைத்தும் உடனடியாக நாசாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மனித வரலாற்றிலேயே இப்படியொரு சாகசத்தை நிகழ்த்தியவர்கள் வேறு யாருமேயில்லை. நீல் ஆம்ஸ்ட்ராங் இந்த மூவரிலும் முதன்மையானவராகக் கருதப்பட்டார். சந்திரப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்த மூவரும் பூமியை நோக்கித் திரும்பினார்கள். இவ்வளவு பெருமைக்குமுரிய அந்த மூவரும், பூமிக்கு வந்திறங்கியதும் செய்த ஒரு காரியம் அனைவரையும் திகைக்க வைத்தது. அமெரிக்காவின் நிஜமான கதாநாயகர்களாக அறியப்பட்ட அந்த மூவரும், பூமிக்கு வந்திறங்கிய சில நாட்களிலேயே, அனைத்து விண்வெளி ஆராய்சிகளிலிருந்தும் ஒரேயடியாக விலகிக் கொண்டார்கள். மூவரும் ஒரே சமயத்தில் ஏன் விலகினார்கள்? என்னும் கேள்விக்கான பதில் தெளிவாக்கப்படாமல் வெற்றிடமாக இருந்து கொண்டது. ஆச்சரியங்கள் அத்துடன் நின்றுவிடவில்லை. படிப்படியாக, நீல் ஆம்ஸ்ட்ராங் யாருடனும் வெளிப்படையாகப் பேசவே மறுத்தார். இரண்டொரு பேட்டிகளைத் தவிர்த்து வேறு எந்தப் பேட்டிகளிலும் அவர் பங்கு கொள்ளவில்லை. இவருடைய இந்த மௌனம், உலகம் முழுவதையும் வியப்பிலாழ்த்தியது. உலக வரலாற்றிலேயே யாரும் செய்துவிட முடியாத ஒரு சாதனையைச் செய்துவிட்டு வந்திருக்கும் ஒருவர், அப்படியே மௌனியாகிவிட்டதில் ஏதோவொரு செயற்கைத்தனம் காணப்பட்டது. மிகப்பெரிய சாதனையைச் செய்துவிட்டதால் ஏற்பட்ட ஒருவித ஞான நிலையில் இவர் மௌனமானாரா? இல்லை இவர் மௌனமாக இருக்க வேண்டுமென்று யாராலும் வற்புறுத்தி வைக்கப்பட்டாரா? அல்லது மக்களுக்குப் பொய் சொல்லக் கூடாது, உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும் என்னும் நல்ல நோக்கத்தில் அவற்றைத் தவிர்த்து வந்தாரா? என்பது எதுவும் தெரியவில்லை. இவருடைய இந்த மௌன காலங்களில் அவரைப் பற்றிய ஒரு முக்கிய வதந்தியும் வெளிவந்தது. 'நீல் ஆம்ஸ்ட்ராங் முஸ்லிமாக மாறிவிட்டார்' என்ற வதந்தி உலகமெங்கும் தீயாகப் பரவியது. ஆனால் நீல் ஆம்ஸ்ட்ராங்கே பின்னாளில் மறுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். நீல் ஆம்ஸ்ட்ராங்கின் அமைதிக்குக் காரணத்தைப் பின்னாட்களில் அல்ட்ரின் கொடுத்த பேட்டிகளின் மூலம் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது. அல்ட்ரின் உடைத்துப் போட்ட உண்மைகளைத் தன் பேட்டிகளின் மூலம் ஆமோதிக்க வேண்டி வரலாமென்பதால், ஆம்ஸ்ட்ராங் அமைதியானார் என்றே பலர் புரிந்து கொண்டார்கள்.





     ஆம்ஸ்ட்ராங்குடன் சென்ற சக நிலவுப் பயணியான அல்ட்ரின் கொடுத்த பேட்டிகள் அனைத்தும் அதிர்ச்சி வகையைச் சேர்ந்தவை. சந்திரப் பயணத்தை முடித்துக் கொண்டு, ஆம்ஸ்ட்ராங், அல்ட்ரின், காலின்ஸ் ஆகிய மூவரும் சந்திரனை விட்டுப் புறப்பட்டுப் பூமியை நோக்கி விண்கலத்தில் வந்து கொண்டிருக்கையில், அல்ட்ரின் கலத்துக்கு வெளியே விண்வெளியில் ஒரு வினோதமான பொருளைக் கண்டார். அல்ட்ரின் தனது படப்பிடிப்புக் கருவியினால் விண்கலத்தின் ஜன்னலினூடாக வெளியே படம் பிடித்துக் கொண்டு வரும் போது, திடீரென இன்னுமொரு விண்கலம் போன்ற ஒன்றைக் கண்டார். சூரிய ஒளியில் தகதகத்துக் கொண்டு, நீண்ட குழாய் வடிவ விண்கலம் ஒன்று இவர்களின் விண்கலத்தை அவதானித்தபடியே தொடர்ந்து வருவதைக் கண்டு பயந்து போனார். உடனடியாகத் தன் சக பயணிகளான ஆம்ஸ்ட்ராங்கிடமும், காலின்ஸிடமும் அதைக் காட்டினார். மூவரும் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றார்கள். அத்துடன் பயமும் அவர்களைப் பற்றிக் கொண்டது. விண்கலங்களில் செல்பவர்கள் தங்களுக்குள் உரையாடும் போதும், நாசாக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் உரையாடும் போதும் ஒரு விதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது நியதி. இது போன்ற சிக்கலான சமயங்களில் வெளிப்படையாக அவர்கள் தங்களுக்குள் உரையாடிவிட முடியாது. காரணம் இந்த உரையாடல்களை ரஷ்யா உட்படப் பலரும் கிரகித்துக் கொள்ளலாம். எனவே பேசுபவை அனைத்தும் அவதானமாகப் பேசப்பட வேண்டும். அத்துடன் இது போன்ற சிக்கலான சமயங்களில் சங்கேதமான மொழியில் பேசவேண்டும். அல்லது மௌனமாக இருந்துவிட வேண்டும். இந்தச் சமயத்தில் அல்ட்ரின், ஹூஸ்டன் கட்டுப்பாட்டு நிலையத்திடம் ஒரு கேள்வியைக் கேட்டார். "ஹூஸ்டன், S4B இப்போது எங்கே இருக்கிறது? (‘where was the S4B?)" என்பதே அந்தக் கேள்வி. இரத்தினச் சுருக்கமாகக் கேட்கப்பட்ட ஒரு கேள்வி அது. அதற்கு "6000 நாட்டிகல் மைல்களுக்கு அப்பால் அது இருக்கிறது" என்னும் பதில் ஹூஸ்டனிடமிருந்து கிடைத்தது. 'S4B' என்பது இவர்கள் பயணம் செய்த ராக்கெட்டிலிருந்து பிரிந்து விழுந்த பகுதியாகும். 'அப்படி வெடித்துப் பிரிந்து போன பகுதியைத்தான், தாங்கள் ஜன்னலினூடாகக் காண்கிறோமோ?' என்ற சந்தேகம் அல்ட்ரினுக்குத் தோன்றியதால், அதை நிவர்த்தி செய்வதற்காகவே அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார். ஆனால், அந்தப் பிரிந்து விழுந்த பகுதியைத் தாங்கள் காணவில்லை என்று மூவருக்கும் நிச்சயமாகத் தெரிந்து போனது. காலின்ஸ், தொலைநோக்கியால் அந்தப் பொருளைப் பார்த்த போது, அது வேறு வடிவத்தில் இருந்திருக்கிறது. அதனால், உடனடியாக மூவரும், விழித்திருந்தால் அது பற்றிப் பேச வேண்டியிருக்கும், பேசினால் அவை பதிவு செய்யப்படும் என்பதால் தூங்கச் சென்று விட்டார்கள். இந்தச் சம்பவத்தில், அந்த மூவருமே அது ஒரு UFO (Unidentified Flying Object) தான் என்ற முடிவுக்கே வந்திருந்தனர். அல்ட்ரின் எடுத்த படப்பிடிப்புக் கருவியில் அது பதிவாகியுமிருந்தது. இந்தச் சம்பவத்தை பல பேட்டிகளில் தெளிவாக அல்ட்ரின் விவரித்துள்ளார். சமீபத்தில் லாரி கிங் (Larry King) அவர்களுக்குக் கொடுத்த ஒரு பேட்டியில் மட்டும், தான் பார்த்தது அந்த உடைந்த பகுதியாக இருக்கலாம் எனக் கூறினார்.


     சந்திரனில் தாங்கள் இருவரும் மட்டுமல்லாமல், வேறு யாரோ கூட இருப்பது போல உணர்ந்ததாகவும் அல்ட்ரின் தனது பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். 'ஏலியன்கள் நிச்சயம் இருக்கின்றன' என்று அவர் சொல்வதற்குத் தயங்கியதேயில்லை. அல்ட்ரினைப் போல வெளிப்படையாக ஆம்ஸ்ட்ராங் எப்போதும் பேசியதில்லை. ஆனால், தான் கண்ட அனைத்தையும் ஆம்ஸ்ட்ராங்கும் கண்டார் என்பதை அல்ட்ரின் உறுதிப்படுத்தினார். 'ஆம்ஸ்ட்ராங் இரண்டு பறக்கும் தட்டுகளைச் சந்திரனில் கண்டதாகவும், அவை தங்களை எப்போதும் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும்' தன்னிடம் கூறியதாக, நாசாவில் முக்கிய பதவி வகித்த 'மௌரிஸ் ஷட்டலின்' (Maurice Chatelain) என்பவர் 1979ம் ஆண்டுகளில் பேட்டியளித்தார். ஆம்ஸ்ட்ராங். 'இரண்டு பறக்கும் தட்டுகள் தங்களை அவதானிப்பதாகச் சொன்னதை' ரஷ்யாவும் கேட்டுக் கொண்டிருந்ததாகப் பின்னர் ரஷ்ய விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டது. இவையெல்லாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், என்ன முடிவுக்கு நாம் வருவதென்றே தெரியவில்லை.





     இத்துடன் முடிந்து விடவில்லை விசயம். 'அப்போலோ 14' விண்கலத்தில் சந்திரனுக்குப் பயணம் செய்த விண்வெளி வீரரான 'எட்கார் மிட்செல்' (Edgar Mitchell) ஏலியன்கள் இருக்கின்றன என்று அடித்துச் சொல்கிறார். சந்திரனில் அதிக நேரம் 'சந்திர நடை' (Moon Walk) நடந்தவர் என்ற சாதனையைப் படைத்தவர் இவர். 9 மணி 17 நிமிடங்கள் இவர் மொத்தமாக சந்திரனில் நடந்திருக்கிறார். அந்த அளவுக்குச் சாதனை செய்தவரே ஏலியன்கள் இருக்கின்றன என்று சொல்லும் போது, நாம் என்ன சொல்வது? ஏலியன் சம்பவங்கள் இவர்களுடன் மட்டும் முடிந்துவிடவில்லை. உச்சக்கட்டமாக 'அப்போலோ 17' சென்றவர்கள் சந்திரனில் இறங்கி அங்கு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, வானத்தில் திடீரென ஒளியை உமிழ்ந்தபடி மிகை வேகத்துடன், ஒரு பொருள் தங்களைக் கடந்து செல்வதை அவதானித்திருக்கிறார்கள். முதலில் பார்த்தவர், பெரும் திகைப்புடன், "அங்கே பார்! அந்த ஒளி என்ன?" என்று அடுத்தவரிடம் அலறுவது படக்காட்சிகளாகப் பதிவாகியுள்ளது. 'அப்போலோ 17' விண்கலத்தில் சென்றவர்கள் பல சம்பவங்களை அவதானித்துள்ளனர் என்று இதிலிருந்து தெரிய வருகிறது. அதே 'அப்போலோ 17' இல் சென்றவர்கள் எடுத்ததாகச் சொல்லும் படம்தான் இப்போது பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகிறது.


     சந்திரனில் மனிதனை ஒத்த உருவம் என்று இந்தப் படம் வெளியாகிய ஆரம்ப நாட்களில் அமெரிக்க அரசும், நாசாவும் இது சம்மந்தமாக எந்தக் கருத்தையும் சொல்லாமல் அமைதியாகவே இருந்து வந்தன. ஆனால், எவ்வளவு காலத்துக்குத்தான் அமைதி காக்க முடியும்? அதனால், வழமைபோல அந்தப் படத்தைப் பற்றிய விபரங்களை மறுப்பதற்கு நாசா வாயைத் திறந்திருக்கிறது. "குறிப்பிட்ட அந்தப் படத்தில் கைவிரல்கள் அடையாளமோ, எண்ணெய்ப் படிவமோ, கறுப்புக் கறையோ பட்டிருக்கலாம். அல்லது அந்தப் படத்தின் நெகட்டிவில் கீறல்கள் ஏதும் விழுந்திருக்கலாம். அவையே மனிதனைப் போன்ற காட்சியாக நமக்குத் தெரிகிறது" என்று சொல்லி அந்தப் படத்தைப் பார்த்த அனைவரையும் குப்புறத் தள்ளியிருக்கிறது நாசா. போதாததற்கு, "இப்படியெல்லாம் தெரிவது சாதாரணம்தான். அது ஒரு 'பரடோலியா' (Pareidolia) விளைவுதான்" என்று சொல்லியுமிருக்கிறது. இப்போது அந்தப் படத்தைப் 'பரடோலியா' என்று சொல்லிவிட்டு எல்லாரும் தங்கள் தங்கள் வேலைகளைப் பார்க்கச் சென்று விட்டார்கள். "அதுசரி, பரடொலியா என்றால் என்ன? நாசா ஏன் இதைப் பரடோலியா என்று சொல்லியது?" இதுதானே இப்போ உங்கள் கேள்வி.


    வானத்தில் மிதந்து கொண்டிருக்கும் வெண்முகில்களிலோ, வீட்டுச் சுவர்களில் உள்ள கறைகள், கோடுகள், வெடிப்புகளிலோ, மரக்கிளைகளிலோ, மரப்பட்டைகளிலோ நாம் பார்வையைச் செலுத்தும் போது, நமக்குப் பழக்கப்பட்ட மிருகங்கள், பறவைகள், மனிதர்கள் ஆகியவற்றின் உருவங்கள் தெரிவது போலத் தோற்றமளிக்கும். நிழல்கள், கருப்புத் திட்டுகள், இரத்தக் கறைகள் கூட இப்படியான தோற்றங்களை நமக்குத் தரும். சம்மந்தமே இல்லாத இடத்தில் நமக்குப் பழக்கமான உருவங்கள் தெரிவதைத்தான் 'பரடோலியா' என்பார்கள். இதையே அந்தப் புகைப்படத்தை மறுப்பதற்கும் அமெரிக்க 'நாஸா' (NASA) நிறுவணம் பயன்படுத்தியிருக்கிறது. ஆனால், அந்தப் புகைப்படத்தை மேலும் பெரிதாக்கி நிதானமாகப் பாருங்கள். நெகட்டிவில் கீறு விழுந்தது போலவா தெரிகிறது? நாசாவின் இந்த நகைச்சுவையான பதிலைக் கேட்கும் போது வெறுப்புத்தான் மக்களுக்கு மீதமாகின்றது. இப்படிச் சொல்வதனால், அந்தப் புகைப்படத்தில் தெரிவது ஏலியன்தான் என்று நான் சொல்கிறேன் என்று அர்த்தமாகிவிடாது. நாசா போன்ற நிறுவணங்கள், மிகுந்த பொறுப்புடன் மக்களுக்கு இது பற்றிய விளக்கங்களைக் கொடுக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.



      'SETI' (Search for Extra Terrestrial Inteligence) என்று வெளிக்கிரகங்களில் உயிரினங்களைத் தேடும் அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் பல இலட்சம் கோடிகள் பணத்தைச் செலவளித்து, அயல் கிரகங்களிலும், வான்வெளிகளிகளும் அங்குலம் அங்குலமாக ஏலியன்களைத் தேடுகிறார்கள். 'யாராவது எங்காவது இருக்கிறார்களா?' என்று தேடிக் கொண்டிருக்கும் அமெரிக்கா தொடக்கம் அகில உலக அரசுகள் வரை, இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறும் போது மட்டும், 'மக்களை முட்டாள்கள்' என்பது போன்ற பதில்களைக் கூறிவிட்டு அமைதியாகிவிடுகின்றன. ஒரு பொதுமகன் வானத்திலோ, பூமியிலோ, பறக்கும்தட்டு ஒன்றைக் கண்டேன் என்று சொல்லிவிட்டால் போதும், அதை மறுப்பதிலும், அதை மறைப்பதிலுமே அரசுகள் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பிக்கின்றன. பின்னர் அதே அரசுகள் விஞ்ஞானிகளுக்குக் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்து, 'எங்காவது உயிரினம் இருக்கிறதா?' என்று தேடுங்கள் என்று கட்டளையிடுகின்றன. இந்த முரணான நடவடிக்கை ஏன்? நீங்கள் இவ்வளவு பணம் செலவளித்து ஏலியனையோ, பறக்கும் தட்டையோ தேடும் போது, பொதுமகன் சொல்பவற்றுக்கும் கொஞ்சம் செவிகொடுக்கலாம் அல்லவா? இப்படி நான் எழுதுகிறேன் என்பதாலும், பொதுமகன் காண்பதெல்லாம் பறக்கும்தட்டு என்று நான் சொல்கிறேன் என்பதல்ல அர்த்தம். உண்மை எதுவானாலும், அதை வெளிப்படையாக மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றுதான் கேட்கிறேன். குறைந்த பட்சம் ஒரு பொதுமகன் அமைதியடையக் கூடிய பதிலையாவது தாருங்கள். சந்திரனில் மனிதனின் உருவம் என்று சொல்லப்பட்டதற்கும் நடந்தது இதுதான். அந்தப் படம் எங்கே எடுக்கப்பட்டது? என்ன சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டது? அதனுடன் இணைந்து எடுக்கப்பட்ட படங்களின் விபரங்கள், அவற்றில் சம்மந்தப்பட்ட அஸ்ட்ராநாட்டுகளின் விபரங்கள் போன்றவற்றை மக்களுடன் பகிர்ந்து, அவற்றைப் பொய்யென்றோ, உண்மையென்றோ நிறுவுவதை விட்டுவிட்டு, அதை மறுப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது நாசா.


     ஏலியன்கள் இருக்கின்றனவா? இல்லையா? என்ற கேள்விகள் சந்தேகமாக நம்முள் ஒலித்துக் கொண்டிருக்க, நாமே ஏலியன்கள்தான் என்னும் முடிவுக்கு நவீன விஞ்ஞானம் வரக் கூடிய சாத்தியங்களும் உண்டு என்பது மட்டும் உண்மை.

Thanks
-ராஜ்சிவா-

1 comment:

  1. இவர்கள் கண்டறிந்து இருப்பார்கள்.
    ஏன் வேறு கிரகத்திற்கு கூட குடிபெயர்ந்து விடுவார்கள்.

    வேறு தேசம் சேர்ந்தவர்கள் முன்னேறிவிட கூடாது என்ற காரணத்தால் எந்த தகவலையும் வெளியிட மாட்டார்கள்.

    அறிவியல் பொதுவில் இருப்பது அவசியம்.

    ஆனால் எல்லாம் அரசிடம்,பெரு முதலாளிகள் உள்ளது..

    ReplyDelete